<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளையனார் வேலூர் கிராமத்தில், புராணச் சிறப்புகள் மிக்க அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழாம் நாள் திருவிழாவான இன்று, பாலசுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.</p>
<h3 style="text-align: justify;">அசுர வதம் செய்த பாலசுப்பிரமணியர்: தல வரலாறு</h3>
<p style="text-align: justify;">இத்தலத்தின் தனிச்சிறப்பு அதன் மூலவர் திருமேனியாகும். புராண வரலாற்றின் படி, மலையன் மற்றும் மாகரன் என்ற இரு அசுரர்கள் இப்பகுதி மக்களைத் துன்புறுத்தி வந்தனர். அவர்களை வதம் செய்து மக்களைக் காக்க, முருகப்பெருமான் தனது திருக்கரத்திலுள்ள வேலினை ஏந்தி போர் புரிந்தார். அசுரர்களை அழித்த கோலத்தில், சுமார் ஆறடி உயரமான கம்பீரமான மூலவராக இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறார். இத்தனை உயரமாக மூலவர் சிலை அமைந்திருப்பது இத்தலத்தின் தனித்துவமான அம்சமாகக் கருதப்படுகிறது.</p>
<h3 style="text-align: justify;">கோலாகலமான தேர் திருவிழா</h3>
<p style="text-align: justify;">பிரம்மோற்சவத்தின் கடந்த ஆறு நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் மயில் வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம் என பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று அதிகாலை, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு, உற்சவ மூர்த்திகள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, வானவேடிக்கை அதிர, உற்சவர் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் "முருகனுக்கு அரோகரா" என்ற கோஷங்களை எழுப்பி பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர். கிராம வீதிகளின் வளைவுகளில் தேர் எளிதாகத் திரும்புவதற்காக ஜேசிபி எந்திரத்தின் உதவியும் பெறப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">குவிந்த பக்தர்கள் கூட்டம்</h3>
<p style="text-align: justify;">இத்தேரோட்ட நிகழ்ச்சியில் இளையனார் வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் நீர்மோர் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருக்கோயில் செயல் அலுவலர் ப.கதிரவன், அறங்காவலர் குழுத் தலைவர் து. கோதண்டராமன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், கிராமப் பொதுமக்கள் ஒருங்கிணைந்து மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். திருத்தேர் வீதி உலா வந்த காட்சியைப் பார்த்த பக்தர்கள், முருகப்பெருமானின் அருளைப் பெற்று மனநிறைவுடன் கலைந்து சென்றனர்.</p>