<p>மகாராஷ்ட்ராவில் திருட்டு சந்தேகத்தில் தனது இருமகள்களையும் தந்தை தலைகீழாக தொங்க விட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<h2><strong>மகள்கள் மீது விழுந்த திருட்டு பழி</strong></h2>
<p>மகாராஷ்டிராவின் சாங்லியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அங்குள்ள அட்பாடி தாலுக்காவில் இருக்கும் பன்புரி கிராமத்தில் தாது ஹைபத் யம்கர் என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அனுஜா யம்கர் என்ற மகளும், 10 வயதில் சரிகா யம்கர் என்ற இரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இரு மகள்கள் மீதும் பக்கத்து வீட்டுக்காரர் திருட்டுப்பழி சுமத்தியுள்ளார்.</p>
<p>இதனால் ஆத்திரமடைந்த தாது ஹைபத் யம்கர் மகள்களிடம் என்னவென்று விசாரித்துள்ளார். பின்னர் அவர்களை தாக்கி உண்மையை வரவழைக்க முயன்றுள்ளார். எனினும் சிறுமிகள் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் மகள்கள் அளித்த பதிலால் திருப்தியடையாத தந்தை உண்மையை சொல்ல வேண்டும் என தனது இரண்டு மகள்களையும் குழந்தைகள் என்று கூட பாராமல் இரவு முழுவதும் வீட்டின் கூரையில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 25ம் தேதி நடைபெற்றுள்ளது. </p>
<h2><strong>தண்ணீர் கூட கொடுக்க மறுப்பு</strong></h2>
<p>அந்தச் சிறுமிகள் இரவு முழுவதும் வலியால் கதறி அழுதுகொண்டே இருந்துள்ளனர். தாகமாக இருக்கிறது என மீண்டும் மீண்டும் தண்ணீர் கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர். ஆனால் தாது ஹைபத் யம்கர் அதனை கொடுக்காமல் மறுத்துள்ளார். வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அவர்களின் தாத்தா சிறுமிகளை கட்டவிழ்த்துள்ளார். இதில் சாரிகா கட்டை அவிழ்த்ததும் மயங்கி விழுந்துள்ளாள். அனுஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p>
<p>அங்கு என்ன நடந்தது என மருத்துவர்கள் கேட்க, அப்போது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அட்பாடி போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அனுஜாவிடம் விசாரணை நடத்தி தாது ஹைபத் யம்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.</p>
<p>இதற்கிடையில் இந்தச் சம்பவம் வெளிவராமல் தடுப்பதற்காக, குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து உயிரிழந்த சாரிகாவுக்கு இறுதிச் சடங்குகளை ரகசியமாக நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமிகளை விடுவித்த அவரது தாத்தாவுக்கு தாது ஹைபத் யம்கர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளின் தந்தை ஹைபத் யம்கர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. பலரும் அந்த தந்தைக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/jock-itch-in-summer-how-to-prevent-hygiene-tips-guide-254543" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>