<p>போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம். - சுந்தர் சி காட்டம்.</p>
<div dir="auto"><strong>மதுரையில் சூடு பறக்கும் மத்திய சட்ட மன்ற தொகுதி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கிட்ட தட்ட அனைத்து கட்சிகளுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டது. கடைசி வரை வேட்பாளர் பட்டியளை வெளியிடாமல் காத்திருந்த காங்கிரஸ் - பிஜேபி கட்சிகள் கூட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வேட்பு மனு தாக்களும் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் மதுரையில் 10 சட்ட மன்றங்களிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இதில் மதுரை மத்திய தொகுதி ஸ்டார் வேட்பாளர் தொகுதியாக மாறியுள்ளது. கடந்த இரண்டு முறை வெற்றி பெற்ற திமுக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மத்திய தொகுதியில் களம் காண்கிறார். அதே போல் தவெக பிரபலம் முஸ்தபா களம் காண்கிறார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>களத்தில் சுந்தர் சி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியில் இயக்குநர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். மதுரையின் மையான மற்றும் குட்டி தொகுதியான மத்திய தொகுதி பரபரப்பாக மாறியுள்ளது. இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சி வாக்குறுதி கொடுத்ததாக தகவல் ஒன்று பரவி வைரல் ஆனது அதில் "<em>நான் வெற்றி பெற்று வந்தால் புனிதத்தலமான மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தை பாதுகாப்பேன்</em>!" - என தெரிவித்தாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்த சூழலில் இந்த தகவல் முற்றிலும் தவறானது என இயக்குநர் சுந்தர் சி மறுப்பு தெரிவித்துள்ளார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுந்தர் சி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">"தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்." எனவும் தெரிவித்துள்ளார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரையில் ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரம் தீராத பிரச்னையாக உள்ளது. இந்த சூழலில் மதரீதியாக பிரச்னை ஒன்று தேர்தல் நேரத்தில் கிளப்பப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது என பொதுமக்கள் புகார் வாசிக்கின்றனர்.</div>
<div dir="auto"> </div>