<p style="text-align: left;">திருப்பத்தூர் அருகே ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருமணமான நபர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<p style="text-align: left;">திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் பாக்கியராஜ் (வயது 42). இவர், வெல்டிங் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகி இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றன.</p>
<p style="text-align: left;">இந்தநிலையில், பாக்கியராஜ், ஜோலார்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. </p>
<p style="text-align: left;">இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாக்கியராஜை காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.</p>
<p style="text-align: left;">பின்னர் பாக்யராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 42 வயதான காமக்கொடூரன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h2 style="text-align: left;">போக்சோ சட்டம்</h2>
<p style="text-align: left;">பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.</p>
<h2 style="text-align: left;">போக்சோ சட்டத்தின் அம்சங்கள்</h2>
<p style="text-align: left;">18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.</p>
<p style="text-align: left;">சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.</p>