<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாதம் ரூ.400/- கல்வி உதவித் தொகையுடன் 2024-2025 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தகவல்.</strong></span></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்காவல் கிராமம், (செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.</p>
<p style="text-align: justify;"> </p>
<h3 style="text-align: justify;"><strong>ஏழு கலைப் பிரிவு</strong></h3>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான <strong>1. குரலிசை 2. நாதசுரம் 3. தவில் 4. தேவாரம் 5. பரதநாட்டியம் 6. வயலின் 7. மிருதங்கம்</strong> ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.350/-ம், இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.325/- மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச் சலுகை 16-17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோறும் ரூ.400/-அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"> </p>
<h3 style="text-align: justify;"><strong>நேர்காணல் வாயிலாக</strong></h3>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வளாக நேர்காணல் வாயிலாக தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">இப்பள்ளியில் 2024-2025 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற நா.இரமணி, தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல் காஞ்சிபுரம்-631 502 எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை <strong>9442572948</strong> என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். </p>