<p>கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, தன்னைப் பற்றி ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p>
<h2><strong>ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவர்</strong></h2>
<p>கரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பேசிய பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் சரமாரியாக விமர்சித்தார். தொடர்ந்து அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கி பேசினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. </p>
<h2><strong>ஜோதிமணி கொடுத்த பதிலடி</strong></h2>
<p>இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜோதிமணி, “பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதனைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை,உழைப்பு, அனுபவம்,கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும் ,நேர்மையோடும, துணிச்சலோடும்,மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட பெண் நான். அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. </p>
<p>நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக ,மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால்,ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ,பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால்,வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை,தடைகளை ,கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். </p>
<p>இந்த கடினமான பாதையில் பயணித்து,சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன். எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேரதலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். </p>
<p>ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரம் பணி புரிய வேண்டும். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும்,பிரச்சினைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல். ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன்.</p>
<p>எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித, ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது. பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது .</p>
<p>நாம் ஒரு பெண் என்பதற்காகவே ஆபாசத் தாக்குதல் அவமதிப்பு, கண்ணியச் சிதைப்பு, பாலியல் அவமானம், மிரட்டல்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இது ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாதிக்காது. பல பெண்களின் குரலை மௌனமாக்கும், அச்சுறுத்தும், இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் <br />பொது வெளிகளைச் சுருக்கும். </p>
<p>பெண்களை வெறும் உடலாக ,பாலியல் பொருளாக ,பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, பெண்களை அவமதிப்பது<br />ஆபாசத் தாக்குதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது. இதுதான் பாஜக ,ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்.பாஜக மாநிலத்தலைவர் துவங்கி ,மாவட்ட தலைவர் வரை இதைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். </p>
<p>பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக இதுபோன்ற இழிசெயல்களை,அழுகிப்போன மனநிலையை, ஆபாச தாக்குதல்களை,பெண்களுக்கு எதிரான அரசியல் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும்,கேள்வி கேட்க வேண்டும்” என ஜோதிமணி தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/easy-home-remedies-for-bad-breath-details-in-tamil-249767" width="631" height="381" scrolling="no"></iframe></p>