<p style="text-align: justify;">திமுகவின் 181 வது தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி 12,500 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். </p>
<h3 style="text-align: justify;">பகுதிநேர சிறப்பாசிரியர்கள் </h3>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். </p>
<h3 style="text-align: justify;">ஊதியம் இல்லாத மே மாதம் </h3>
<p style="text-align: justify;">கடந்த பதிமூன்று ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்று வரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.</p>
<h3 style="text-align: justify;">தாமதம் ஆகும் ஊதிய உயர்வு </h3>
<p style="text-align: justify;">இந்நிலையில் கடந்த ஆண்டு 2023 ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். இதனை அடுத்து நடப்பு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூபாய் 2500 சம்பளம் உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது. ஆனாலும் 10 ஆயிரம் ரூபாய் SNA கணக்கிலும், 2500 ரூபாய் ECS முறையிலும் தனித்தனி பரிவர்த்தனையாகவே பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக இந்த 12500 ரூபாய் சம்பளத்தை ஒரே பரிவர்த்தனையில் இதுவரை பட்டுவாடா செய்யப்படாததால் சம்பளம் தாமதமாகவே வழங்கப்பட்டது. இதனால் 12,500 ரூபாய் சம்பளத்தை ஒரே பரிவர்த்தனையாக வழங்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.</p>
<h3 style="text-align: justify;">தேர்தல் வாக்குறுதியை நடைமுறைபடுத்த கோரிக்கை </h3>
<p style="text-align: justify;">இந்நிலையில் திமுக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 181 ன்படி பணி நிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியலை தர வேண்டும். பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் ஒழியும். பணி நிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழுமையாக தீர்வு அளிக்கும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கங்கள் அனைத்து ஒன்றினைந்து வருகின்ற ஜனவரி 8 -ம் தேதி முதல் சென்னையில் உள்ள DPI வளாகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்துள்ளார்‌. அதற்காக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எற்கனவே தூய்மை பணியாளர்கள், இடைநிலை பகுதி மூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் பகுதிநேர ஆசிரியர்களின் அடுத்தடுத்த போராட்டம் ஆளும் அரசுக்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் அழுத்தத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.</p>