<h2>முறைகேடு- <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு எச்சரிக்கை</h2>
<p>தமிழகத்தில் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து நேற்றைய தினம் உத்தரவிடப்பட்டது.</p>
<h2>மின்வாரியத்தில் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு</h2>
<p>இந்த நிலையில் மின்வாரியத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படை தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/AvIGX91ylcI?si=8aLA-OCWLSFN2xQV" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h3>2 பேர் சஸ்பெண்ட்- ஓய்வூதியம் நிறுத்தம்</h3>
<p>மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முறையற்ற நிர்வாக தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் காரணமாக வி. காசி தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) மற்றும் பி. சந்திரசேகரன், தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும், மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) பசுமை எரிசக்தி கழகம் திரு. எஸ். மங்களநாதன் அவர்களின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தபட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரனை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/india/what-is-the-punishment-for-having-2-pan-cards-261103" width="631" height="381" scrolling="no"></iframe></p>