<p>அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் பல நாடுகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கச்சா எண்ணெய், சிலிண்டர் கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக இந்தியா முழுவதும் மத்திய அரசு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் ரூபாய் 1000 வரை உயர்த்தியதால் சிலிண்டர் விலை தற்போது ரூபாய் 3 ஆயிரத்து 300 வரை உயர்ந்துள்ளது.</p>
<h2><strong>ஒரே நாளில் ரூபாய் 1000 உயர்வு:</strong></h2>
<p>சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூபாய் 1000 உயர்ந்ததால் உணவகங்கள், தேநீர் கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இதன் தாக்கம் உடனடியாக எதிரொலித்துள்ளது. </p>
<p>இந்த சூழலில், சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியில் வெளியூரில் தங்கி மாணவர்கள், வேலை பார்க்கும் இளைஞர்கள் ஆகியோர் தங்கியிருக்கும் விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு விடுதிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்தனர். </p>
<h2><strong>விடுதி கட்டணம் உயர்வு:</strong></h2>
<p>4 பேர் வசிக்கும் ஒரு அறையில் 6 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 7 ஆயிரத்து 500 வரையிலும், 3 பேர் வரை வசிக்கும் ஒரு அறைக்கு ரூபாய் 7 ஆயிரம் முதல் ரூபாய் 8 ஆயிரம் வரையிலும், இரண்டு பேர் வசிக்கும் அறைக்கு ரூபாய் 8 ஆயிரம் முதல் ரூபாய் 9 ஆயிரம் வரையிலும் மாதாந்திர விடுதி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில விடுதிகளில் வாடகை தவிர மின்கட்டணம் தனியாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என்று கருதப்படுகிறது.</p>
<p>தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதிகள் இயங்கி வருகிறது. 20 லட்சம் பேர் இந்த விடுதிகளில் தோராயமாக வசித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளில் 12 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். </p>
<h2><strong>இளைஞர்கள், மாணவர்கள் அவதி:</strong></h2>
<p>சிலிண்டர் விலை உயர்வு காரணமாக விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல விடுதிகளில் சப்பாத்தி, தாேசை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். </p>
<p>மாத வருமானம் குறைவாக உள்ள பலரும் விடுதிகளில் அறைகளை பகிர்ந்து நெருக்கடியான சூழலில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில், அவர்களிடம் இருந்து வாடகையாக மேலும் அதிக தொகை வசூலிப்பதும், பல உணவுகளை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதும் அவர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. </p>
<p><a title="கோடை கோபம் குமுற, காணவில்லை இளநீரை: மக்கள் பார்வை திரும்பியது கரும்பு ஜூஸ் பக்கம்" href="https://tamil.abplive.com/news/thanjavur/summer-rages-fresh-water-missing-people-s-attention-turns-to-sugarcane-juice-tnn-259069" target="_self">கோடை கோபம் குமுற, காணவில்லை இளநீரை: மக்கள் பார்வை திரும்பியது கரும்பு ஜூஸ் பக்கம்</a></p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/lemon-juice-or-cocunut-water-which-is-better-259036" width="631" height="381" scrolling="no"></iframe></p>