<p>கர்ப்ப காலங்களில் பெண்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செல்வது தொடர்ச்சியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. </p>
<p>இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார் 8% பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது. இது மகப்பேறுக்கு முந்தைய குழந்தை பராமரிப்பு விகிதம் பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கருவுறுதல் விகிதம் 0.1 சதவிகிதமும், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் விகிதம் ஆகியவற்றிலும் சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>அந்த கணக்கெடுப்பில் கடைசியாக 2019-2021ல் நடந்த ஆய்வில் 95.8% பெண்கள் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை ஒன்றில் கலந்துகொண்டது தெரியவந்தது. ஆனால் 2023-24ல் இது 92.2% ஆக குறைந்திருக்கிறது. அதேசமயம் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகளை மேற்கொண்ட பெண்களின் விகிதம் 90.6 சதவிகிதத்தில் இருந்து 87.6% ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த ஒப்பீடு 86.2 சதவிகிதமாக உள்ள நிலையில் கிராமப்புறப் பெண்கள் 88.6 சதவிகிதமாக உள்ளது தெரிய வந்துள்ளது. </p>
<p>இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையின் இயக்குநர் சோமசுந்தரம், “ஏறக்குறைய 99.7 சதவிகிதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளது. அதேசமயம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு சதவிகிதம் 2 சதவிகிதம் அதிகரித்துள்ள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்கள் கிட்டதட்ட 3.3 சதவிகிதம் குறைந்து விட்டது. </p>
<p><iframe title="CV shanmugam speech I ”தயங்காம சொல்லுங்க! என்னால முடிஞ்சத செய்றேன்” உணர்ச்சிவசப்பட்ட CV சண்முகம்" src="https://www.youtube.com/embed/RIlzvOR3SdY" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>நாங்கள் சவால்களையும் குறைபாடுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதற்கான தீர்வுகளை கண்காணித்து வருகிறோம் எனவும் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளின் விகிதம் 60.2 சதவிகிதத்தில் இருந்து 54.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேசமயம் ஆறு மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் சதவிகிதம் 0.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் இதே வயதுடைய குழந்தைகள் 45 சதவிகிதம் பேருக்கு இன்னும் பிரத்யேக தாய்ப்பால் ஊட்டப்படவில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றது. 12-23 மாத வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதும் குறைந்துள்ளது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. </p>
<p>நீரிழிவு, உடல் பருமன் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து தொடர்பான பிரச்னைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் வரை சுகாதார காப்பீடு இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது 60.3 சதவிகிதம் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு பிந்தைய உடல்நல பராமரிப்பு குறித்த பிரச்னைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுகாதார வசதிகளில் பல மாநிலங்களை விட முன்னணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் தாய்மார்களுக்கான சுகாதாரம் தொடர்பான பிரச்னையில் புதிய சவால்கள் உருவாகி வருவது மாநில அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-to-the-body-if-you-consume-ginger-and-lemon-together-262079" width="631" height="381" scrolling="no"></iframe></p>