<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான் என்று அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து திருவையாறில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தஞ்சை மாவட்டம் திருவையாறு தேரடியில் அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p>
<p style="text-align: justify;">திருவையாறு பகுதி மக்கள் எத்தனை முறை தான் தி.மு.க.விற்கே ஓட்டுப்போட்டு சலிச்சுப்போயிருப்பீங்க? மு.க.ஸ்டாலினும், அவரது பையன் குட்டி ஸ்டாலினும் வந்து அதை செய்தோம். இதை செய்தோம். அதுவும் செங்கலை தூக்கிட்டு வந்தாரே எய்ம்ஸ் கட்டவில்லை என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது. இப்போது இவங்க அப்பா ஆட்சியில் எத்தனை மருத்துவக்கல்லூரி வந்துச்சுன்னு நீங்கள் கேட்கணும்.</p>
<p style="text-align: justify;">நீட்டை எங்க அப்பா ரத்து செஞ்சுருவார் என்று குட்டி ஸ்டாலின் சொன்னாரு. இன்னும் பேனாவே கிடைக்கவில்லையோ. அவர் இங்க வந்தாரா? வந்தது முன்னாடியே தெரிஞ்சிருந்தா கார்த்திகேயன் கிட்ட சொல்லி ஒரு பேனா கொடுக்க சொல்லிருப்பேன், உங்க அப்பாகிட்ட போய் கையெழுத்து போட சொல்லுன்னு. மக்களை ஏமாத்துவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத்தொழிலாளர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களுமே இந்த ஆட்சியால ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். </p>
<p style="text-align: justify;">பழைய தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆனால் இப்போது புதிய தேர்தல் வாக்குறுதியை தைரியமாக கொடுக்குறாங்க பாருங்க. காரணம் உங்களை எல்லாம் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். உங்க வரிப்பணத்தை எடுத்து உங்ககிட்டயே ரூ.500, ரூ.1000 என்று கொடுக்குறாங்க. தமிழ்நாட்டில் அனைத்துத்துறைகளிலும் நடக்கின்ற ஊழல் ஒரு குடும்பத்தின் கைக்கு தான் போகுது. இன்றைக்கு தி.மு.க.காரர்கள் செய்யாத தொழிலே இல்லை. கஞ்சா விற்பது, ஹெராயின் விற்பது, போதை மாத்திரை விற்பது எனத் தொடங்கி பெண்களுக்கு வன்கொடுமை செய்வது இவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்கிற திமிர்.</p>
<p style="text-align: justify;">கடலை மிட்டாய் விக்கிற மாதிரி இன்னைக்கு கஞ்சா விக்கிறான். தாய்மார்கள் எல்லாம் பயப்படுகிறார்கள். தமிழக இளைஞர்கள் கூலிப்படைகளாக மாறி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதல்வர் குடும்பத்திற்கு தான் பாதுகாப்பு. வேறு யாருக்கும் கிடையாது. தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் மத்தியில் இருந்தபோதுதான் மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் என விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நமது டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் இங்கெல்லாம் தொழிற்சாலைகள் வந்திருக்கும். தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான். எனவே குக்கர் சின்னத்தில் வாக்களித்து தம்பி வேலு.கார்த்திகேயனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.</p>
<p style="text-align: justify;">பிரசாரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் சூரியபிரகாஷ், இளங்கோ, ராஜா, கலியமூர்த்தி, நகர செயலாளர்கள் செந்தில்மணி, அசோக்குமார், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் ஜோதி, மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், பா.ஜனதா மாவட்ட தலைவர் கென்னடி, பா.ம.க. மாவட்ட செயலாளர் கனகராஜ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உத்திராபதி, வளரும் தமிழகம் மாவட்ட செயலாளர் பிரசாத் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். </p>