<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணி இல்லை என தெரிவித்த நிலையில், அவர் மீது கரூர் சம்பவத்தை மையப்படுத்தி தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. </p>
<h2><strong>கரூர் சோக சம்பவம்</strong></h2>
<p>2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குகிறது. இதற்காக கடந்த 2025 செப்டம்பர் மாதம் முதல் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வந்தார். அந்த வகையில் செப்டம்பர் 27ம் தேதி அவர் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள வேலுசாமிபுரத்தில் இரவு 7 மணிக்கு மக்களை சந்தித்து உரையாற்றினார். </p>
<p>அவரைக் காண அந்த இருவழி சாலை பாதையில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். இதனிடையே திடீரென விஜய் பேசி முடித்த சில நிமிடங்களில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்டார். </p>
<h2><strong>சிபிஐ விசாரணை</strong></h2>
<p>இப்படியான நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒருநபர் விசாரணை ஆணையத்தை ஒரே நாளில் அமைத்தது. சிறப்பு எஸ்.ஐ.டி குழு அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தீர்ப்பளித்தது. விஜய் சிபிஐ விசாரணைக்கு 3 முறை ஆஜராகியுள்ளார். அதேசமயம் கரூர் மாவட்ட திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். </p>
<p>தவெக தரப்பில் கரூர் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் சட்டமன்ற தேர்தலில் விஜய் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால் அவரை எதிர்பார்த்து காத்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. </p>
<h2><strong>தோண்டி எடுக்கப்படும் கரூர் விவகாரம்</strong></h2>
<p>இந்த நிலையில் கரூர் தேர்தல் பரப்புரை காட்சிகள் அனைத்தும் விஜயின் கடைசிப் படமான ஜனநாயகனுக்காக எடுக்கப்பட்டவை என குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. விஜய் இது சம்பந்தப்பட்ட கேமரா காட்சிகளை அழிக்க முயன்றதை சிபிஐ கண்டறிந்ததாகவும் அதன் காரணமாக 3 முறை அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக தங்களை காட்டிக்கொள்ளும் இணையவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். </p>
<p>இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் எங்களிடமும் ஆதாரம் உள்ளது. விஜய் பேசும்போது இருந்த கூட்டம், மக்களின் ஆரவாரத்தால் என்ன நடந்தது என்பதை சமர்பிக்கிறோம் என வீடியோ காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர். <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொல்லப்படுபவை என சரமாரியாக எதிர்த்தரப்பை தவெக விர்ச்சுவர் வாரியர்ஸ் விமர்சித்துள்ளனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/fruits-that-are-nectar-for-kidney-health-know-in-telugu-252874" width="631" height="381" scrolling="no"></iframe></p>