<p>டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யவும் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவும் இன்றே கடைசித் தேதி ஆகும்.</p>
<p>தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 அளவிலான பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவர்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகின. இந்த நிலையில், இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அதேபோல குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இதற்குத் தேர்வர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யவும் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவும் இன்றே (டிசம்பர் 18) கடைசித் தேதி என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.</p>