<p><strong>TN NEEDS Scheme:</strong> தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.</p>
<h2><strong>”நீட்ஸ்” திட்டத்தின் நோக்கம்</strong></h2>
<p>படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இளங்கலை, முதநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித்தகுதி பெற்றிருப்பவர் தேர்வு செய்து ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படுகிறது. பிறகு வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.</p>
<h2><strong>மானியம் & வட்டி விவரம்:</strong></h2>
<p>புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு, தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகித (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவிகித வட்டி மானியமும் அளிக்கப்படும்.</p>
<h2><strong>விண்ணப்பதாரருக்கான தகுதிகள்:</strong></h2>
<p>புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பதுடன் ஐடிஐ, பட்டயப் படிப்பு (டிப்ளமோ) இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.</p>
<h2><strong>வயது வரம்பு:</strong></h2>
<ul>
<li>21-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.</li>
<li>சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45.</li>
<li>பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.</li>
<li>குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.</li>
</ul>
<h2><strong>விண்ணப்பதாரருக்கான நிபந்தனைகள்:</strong></h2>
<ul>
<li>திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் தொடங்கலாம்.</li>
<li>பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத செலுத்த வேண்டும்.</li>
<li>ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.</li>
<li>வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.</li>
<li>தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று தேர்வுக் குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.</li>
<li>விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை அணுகலாம். அல்லது w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n‌ என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.</li>
</ul>
<p><strong>கடனை திருப்பி செலுத்தும் காலம்</strong> - 9 ஆண்டுகள் (விடுமுறைக் காலம் 2 ஆண்டுகள் உட்பட)</p>