<p>திமுக தலைமையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் காரணம் தெரிவித்துள்ளார். </p>
<p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், திமுக – விசிக இடையே 8 தொகுதிகளுக்கு தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகி உள்ளது. இரட்டை இலக்கங்களை விசிக வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது 8 இடங்களில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒப்புதல் அளித்துள்ளார்.</p>
<h2><strong>இரட்டை இலக்க இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம்</strong></h2>
<p>தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நேற்று நடந்த விசிக கூட்டத்தில் இரட்டை இலக்க இடங்கள், ஒரு மாநிலங்களவை இடத்தைக் கேட்டுப் பெற தீர்மானம் நிறைவேற்றினோம். முதல்வர் ஸ்டாலினிடமும் இதையே வலியுறுத்தினோம்.</p>
<p>எனினும் கூட்டணியின் நலனுக்காக 8 தொகுதிகளில் போட்டியிடும் இந்த முடிவை ஏற்கிறோம். விசிகவின் நலனைப் போலவே கூட்டணியின் நலமும் முக்கியம். வலதுசாரிகள் வலுப்பெற இடம் கொடுக்கக்கூடாது. திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.</p>
<h2><strong>18 தொகுதிகளை கொடுத்த திமுக</strong></h2>
<p>இடதுசாரி அரசியலை பாதுக்காக்க போராடக் கூடிய இயக்கங்களுக்கு திமுக, 18 தொகுதிகளை அளித்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தொகுதி குறைவாகத் தோன்றும். ஆனால் வெற்றி இலக்கை நோக்கியே உடன்பாடு ஏற்படுள்ளது. தொகுதி உடன்பாட்டில் மனநிறைவு ஏற்பட்டுள்ளது.</p>
<p>கூட்டணி உடன்பாடு ஏற்பட தாமதமானதால் புதுச்சேரியில் 3 இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளோம்’’.</p>
<p>இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/this-method-will-remove-stubborn-bathroom-stains-in-minutes-254173" width="631" height="381" scrolling="no"></iframe></p>