<h2>தமிழகத்தில் தொடர் போராட்டம்</h2>
<p>தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் இரண்டு மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. அதே நேரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என பல தரப்பிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் டாஸ்மாக் ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் டாஸ்மாக ஊழியர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது அதிமுக, இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது, பெண்களுக்கு பாதுகாப்பின்மை,</p>
<h2> பணி நிரந்தரம்- டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை</h2>
<p>கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகிவிட்டது. திமுக அரசின் <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> இவை எதையும் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது கண்டனத்திற்குரிய விஷயமாகும் என கூறியுள்ளார். அந்த வகையில், டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும், பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், </p>
<h2>டாஸ்மாக் ஊழியர்கள் -அதிமுக பேரணி</h2>
<p>அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் வருகிற 11.2.2026-புதன் கிழமை காலை 10 மணியளவில் முன்னாள் அமைச்சர். பி. தங்கமணி தலைமையில், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று கண்டனக் குரல் எழுப்பி, நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்க அழைப்பு</h2>
<p>அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக பணியாளர்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/lose-weight-easily-without-going-to-the-gym-here-s-the-easy-way-249112" width="631" height="381" scrolling="no"></iframe></p>