<p>சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியை குடும்ப தகராறு காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. </p>
<p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இன்று வழக்கம்போல பள்ளியில் மாணாக்கர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர் ஸ்ரீவித்யாவை தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதனைக் கண்டு அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகள் பயந்து அலறல் சத்தம் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் சக ஆசிரியர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஸ்ரீவித்யா ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p>
<p>இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் மற்றும் ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட ஸ்ரீவித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக நடந்தது கண்டறியப்பட்டது.</p>
<p>அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை ஸ்ரீவித்யாவுக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஜயமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் அசோக சிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது. விஜய முருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. </p>
<p>இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீவித்யா மீது விஜய முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை கெட்ட வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் சத்தம் போட்டு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து தனது மகள் அசோக சிவசுந்தரியை கூட்டிக்கொண்டு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீசில் ஸ்ரீவித்யா புகார் அளித்து இருந்தது தெரியவந்தது. </p>
<p>கணவர் விஜய முருகனைப் பிரிந்து ஒரு மாதமாக ஓமலூர் பகுதியில் குடியிருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் தன் மீது போலீஸில் புகாரளித்த மனைவி மீது விஜய முருகன் கடும் கோபத்துடன் இருந்துள்ளார். தனது திட்டத்தின்படி இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய கணவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனது மூன்று வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து விஜய முருகன் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/tamil-new-year-special-mango-pachadi-recipe-256292" width="631" height="381" scrolling="no"></iframe></p>