<p>திறம்பட செயல்படாத வீரர்களை வெளியேற்ற பரிசீலிப்பதாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>ரோகித் சர்மாவிற்கு என்ன ஆச்சு?</strong></h2>
<p>வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற <a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> லீக் சுற்று போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த படிதார் தலைமையிலான அணி 240 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், அந்த மொத்த நம்பிக்கையும் காயம் காரணமாக அவதிப்பட்டு ரோகித் சர்மா ஆடுகளத்தை விட்டு வெளியேறியபோதே உடைய தொடங்கிவிட்டது. 13 பந்துகளுக்கு 19 ரன்கள் எடுத்து இருந்தபோது இனியும் தன்னால் பேட்டிங்கை தொடர முடியாது என கூறி ரோகித் சர்மா ஆடுகளத்தில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/is-makhana-good-for-summer-diet-details-in-pics-256245" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>ஆடுகளத்தில் நடந்தது என்ன?</strong></h2>
<p>பேட்டிங்கை தொடங்குவதற்காக ஆடுகளத்திற்கு வந்தபோதே, ரோகித் சர்மா சிரமப்படுவதை உணர முடிந்தது. இருப்பினும் ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். சரியாக ஐந்தாவது ஓவரில் காலில் தசைப்பிடிப்பை உணர்ந்து, உடனடியாக மருத்துவர்களின் உதவியை நாடினார். அவர்களது உதவிக்கு பிறகு தொடர்ந்து ஆட முயன்றாலும், ஆறாவது ஓவரில் ஒரே ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டு, காயத்தின் தீவிரத்தை உணர்ந்து ரிடையர்ட் ஆவதாக அறிவித்து ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். இது உள்ளூர் மும்பை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.</p>
<h2><strong>ரோகித்திற்கு என்ன காயம்?</strong></h2>
<p>போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மும்பை வீரர் ரூதர்ஃபோர்டிடம், ரோகித்தின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “அது எனக்கு உறுதியாக தெரியவில்லை. அது தொடையில் ஏற்பட்ட ஒரு சிறிய தசைபிடிப்பு. எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் மாற்றுவீரர்களுக்கான இருக்கையில் இருந்தேன். எனவே, அதுபற்றி எனக்கு அதிக தகவல்கள் தெரியவில்லை”என பதில் அளித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டது உறுதியானாலும், தற்போதைய நிலை என்ன? அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. நடப்பு தொடரில் மும்பை அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற பட்டியலில், 137 ரன்களுடன் ரோகித் முதலிடம் வகிக்கிறார். ஒருவேளை அவர் இந்த தொடரில் இருந்து விலகினால், அது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.</p>
<h2><strong>வீரர்களை நீக்க ஹர்திக் பரிசீலனை</strong></h2>
<p>இதனிடையே, போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக், வீரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, “எங்களுக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பல விஷயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிச்சயமாக இதுவரை நாங்கள் எடுத்த முடிவுகள் பலனளிக்கவில்லை. ஓரிரு போட்டிகளில் நாங்கள் டாஸ் வென்றிருக்கிறோம், ஆனால் ஒரு பேட்டிங் குழுவாகவோ அல்லது பந்துவீச்சுக் குழுவாகவோ எங்களிடம் வேறு என்ன வழிகள் உள்ளன என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்” என ஹர்திக் பேசியுள்ளார். அதவாது ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டும் திறம்பட செயல்படாத வீரர்களுக்கு மாற்றானவர்களை களமிறக்க உள்ளதாக பேசியுள்ளார்.</p>