<p>புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<h2>புதுச்சேரியில் கொசுத் தொல்லையால் மக்கள் கடும் அவதி</h2>
<p>புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:<br />புதுச்சேரி மாநிலம் முழுவதும் குறிப்பாக நகரப் பகுதியில் கொசுத் தொல்லையால் மக்கள்‌‌ சொல்லுனா துயரத்தில் இருந்து வருகின்றனர்.</p>
<p>பருவ மழை காலம் முடிந்து குளிர்காலம் ‌ தொடங்கியுள்ள நிலையில் கொசு உற்பத்தி அதிக அளவில் உருவாகியுள்ளது. கொசுக்கடியால் மக்கள் டெங்கு, மலேரியா, வைரஸ் ஃபீவர் காய்ச்சல் என பல்வேறு தொற்று நோய் உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.</p>
<p>தேர்தலை முன்னிறுத்தி அவசர அவசரமாக சாலை வாய்க்கால் பணிகள் செய்யப்படுவதால் ஆங்காங்கே சேரும், சகதியுமாக தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சாலை இரு ஓரத்திலும் வாய்க்கால்கள் சரிவர தூர்வரப்படாததால் கழிவு நீர் தேங்கி அதிக அளவில் கொசு முட்டை இட்டு லார்வா பருவத்தில் வளர்கிறது.</p>
<p>கொசு உற்பத்தியை தடுக்க லார்வா பருவத்திலேயே உரிய கொசு அழிப்பு மருந்தினை கழிவுநீரில் தெளிக்க வேண்டிய மலேரியா கட்டுப்பாட்டு துறை செயல் இழந்து போய் உள்ளது. அங்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் கொசு மருந்து அடிக்கும் பணியே தேக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொசுக்கடியால் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொசுவை ஒழிக்க புகை மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும். அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்களுடைய உயிர் நலன் சம்பந்தமான இந்த பிரச்சனையில் ஆளும் அரசும், சுகாதார துறையும் அலட்சியத்துடன் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் கொசுவை கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க உரிய மருந்து தெளிப்பான்னை பயன்படுத்த வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை நகராட்சி துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய துறைகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் கொசு உற்பத்தியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கூறிய துறைகளின் உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்து கொசு ‌ உற்பத்தியை தடுத்து நிறுத்திட வேண்டுமாய் அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அன்பழகன் அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்.</p>