<p>பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ/ மாணவியருக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கலாம்‌ என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ அழைப்பு விடுத்துள்ளார்,</p>
<p>அரசு, அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ தொழிற்கல்லூரிகளில்‌ அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ பிற்படுத்தப்பட்ட (பி.வ) மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும்‌ சீர்மரபினர்‌(சீ.ம) மாணவ/ மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்‌ கீழ்க்கண்ட நிபந்தனைகளின்‌ அடிப்படையில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ (ம) சிறுபான்மையினர்‌ நலத்துறை மூலம்‌ வருடந்தோறும்‌ செயல்படுத்தப்பட்‌டு வருகின்றன.</p>
<h2><strong>வருமான வரி நிபந்தனை இன்றி கல்வி உதவித்தொகை</strong></h2>
<p>அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ பிவ/ மிபிவ/ சீம மாணவ/ மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.</p>
<p>முதுகலை, பாலிடெக்னிக்‌, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம்‌ ரூ.2,50,000,/-க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.</p>
<p>2024- 2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள்‌ University Management Information system (UMIS) <a href="http://umis.tn.gov.in">http://umis.tn.gov.in</a> என்ற இணையதளம்‌ மூலம்‌ வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. கல்வி உதவித்தொகைக்கு மாணாக்கர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்கலாம்‌. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கக் கடைசி நாள்‌ <strong>28.02.2025</strong> ஆகும்‌</p>
<h2><strong>புதுப்பித்தல்‌ மாணவர்‌கள்</strong></h2>
<p>ஏற்கனவே, கல்லூரியில்‌ கல்வி உதவித்தொகை பெற்று 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 2, 3(ம)4 ஆம்‌ ஆண்டு பயின்று வரும்‌ புதுப்பித்தல்‌ மாணாக்கர்கள்‌, கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்ப வேண்டிய அவசியமில்லை.</p>
<p>அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில்‌ நடப்பாண்டில்‌ கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள்‌ மூலம்‌ உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்‌.</p>
<h2><strong>புதிய மாணவர்கள்</strong></h2>
<p>நடப்பு கல்வியாண்டில்‌ (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில்‌ முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள்‌, தற்போது தாங்கள்‌ பயிலும்‌ கல்லூரியில்‌ கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி <a href="http://umis.tn.gov.in">http://umis.tn.gov.in</a> என்ற இணையத்தளத்தின்‌ மூலம்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்‌. முதல்‌ தலைமுறை பட்டதாரி எனில்‌ அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்‌.</p>
<p>மேற்படி, விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து BC, MBC & DNC வகுப்பைச்‌ சார்ந்த மாணாக்கர்களை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.</p>
<p>கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை, அலுவலக நேரங்களில்‌ அணுகி தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. </p>
<p><strong>கூடுதல் தகவல்களுக்கு: <a href="http://umis.tn.gov.in">http://umis.tn.gov.in</a></strong></p>