<p>Peacock Curry Video : <em>இணைய வசதி மலிவாக கிடைக்க ஆரம்பித்த உடன் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வந்தது. அதில் வீடியோ பதிவிட 1000 நபர்கள் இருக்க அதை பொறுமையாக அமர்ந்து பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். இப்படியாக சமையல் செய்வது, நடனமாடுவது, பாடுவது உள்ளிட்டவற்றில் தொடங்கி அவர்கள் குடும்பத்தில் அன்றாட என்ன நடக்கிறது என்பதை காட்ட தினமும் வ்ளாக் போன்றவற்றை பதிவிட்டு வருகின்றனர் யூடியூபர்கள்</em></p>
<p>பெரிய பாத்திரங்களில் 100 கோழி, 10 ஆடு சமைத்து அதை வீடியோவாக பதிவிடும் யூடியூப் சேனல்களும் இருந்து வருகின்றன. இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், ”<em>வித்தியாசமாகத்தான் நாங்கள் ஏதாச்சும் செய்வோம்</em>” என்று <em>ஐஸ்கிரீம் தோசை, ஐஸ்க்ரீம் ரசம், மட்டன் பிரியாணி கேக்</em> என கண்ணில்படும் கலவரமான விஷயங்களை சமைத்து சாப்பிட்டு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள் யூ ட்யூப் உணவு வ்ளாகர்கள்.</p>
<p>இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் சிர்சிலா பகுதியை சார்ந்த யூடியூபர் கொடாம் ப்ரனாய் குமார் என்பவர் மயிலை குழம்பு வைத்து சாப்பிடும் வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ செம வைரலாக, இந்திய வனத்துறையினர் ஞாயிறுக்கிழமை அன்று அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.</p>
<p>வனத்துறையினர், இது போன்ற வீடியோ பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அழிக்கும் நோக்கில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கொடாம் ப்ரனாய் குமாரின் யூடியூப் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளனர். சிர்சிலா மாவட்ட எஸ்.பி அகில் மஹஜான், “குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது போன்ற செயலில் ஈடுபட்ட இவருக்கும் இது போன்றவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்.” என கூறினார்.</p>
<p><strong><em>ப்ரனாய் குமாரின் இரத்த மாதிரியையும், அவர் வைத்த மயில் குழம்பும் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட்டில் இது மயில்தான் என்று உறுதி செய்யப்பட்டால், யூடியூபர் ப்ரணாய்க்கு நிச்சயம் தண்டனை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</em></strong></p>
<p> </p>