<p><strong>Muhammad Yunus: </strong>வங்கதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக, நோபல் பரிசு வென்ற அந்நாட்டைச் சேர்ந்த முகமது யூனஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். </p>
<h2><strong>முகமது யூனஸ் தலைவராக தேர்வு:</strong></h2>
<p>மாணவர்களின் புரட்சி காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 'ஏழைகளுக்கான வங்கியாளர்' என்று அழைக்கப்படும் யூனஸ், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில், யூனஸ் தலைமையில் வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தில் 10-14 முக்கிய நபர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<h2><strong>யூனஸ் - ஷேக் ஹசீனா மோதல்:</strong></h2>
<p> லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீள உதவியதற்காக, தற்போது 83 வயதான முகமது யூனஸிற்கு, கடந்த 2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யூனுஸ் மீது 190க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஹசீனா அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் அவர் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 60க்கு மேல் ஆனவர் என்ற அடிப்படையில், கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p>