<p>காலனி என்ற பெயரைத் தாங்கி அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்த நிலையில், ஊர் பொது மக்களின் கோரிக்கைக்கு இணங்க, பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:</strong></p>
<p>’’நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.</p>
<h2><strong>பெயரினை அழித்து, அரசாணையை வழங்கினோம்</strong></h2>
<p>இந்த நிலையில் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வெளியிட்டோம். தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ‘அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினோம்.</p>
<p>இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம். ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அன்பழகனிடம் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.</p>
<p>‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ - மு.க’’</p>
<p>இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.</p>