<p>சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,652 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,849 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.</p>
<h2>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</h2>
<p>மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 118.83 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதேஅளவில் நீடித்தது. </p>
<p>மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,652 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,849 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.</p>
<p>அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 6,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
<p>அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று(செப். 23) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.83 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 91.96 டிஎம்சியாக உள்ளது,</p>
<p> </p>
<h2>ஐந்தருவி அருவிகளில் ஆர்ப்பரித்த தண்ணீர்</h2>
<p> </p>
<p>கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 9,500 கனஅடி வந்தது. இன்று 2-வது நாளாக அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.</p>
<p> </p>
<p>இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.</p>
<p>நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p>