<p>மணலி புது நகர் அருகே, எண்ணெய் குடோன் வெடித்துச் சிதறி, 60 அடி உயரத்திற்கு மேல் எண்ணெய் பேரல்கள் தீப்பிழம்புகளுடன் தூக்கி எறியப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் தவித்து வருகின்றனர். </p>
<h2>வெடித்துச் சிதறிய எண்ணெய் குடோன்</h2>
<p>திருவள்ளூர் மாவட்டம் மணலிபுது நகரை அடுத்த விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், லட்சுமி நகரில் இயங்கி வரும் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் சத்திய சாய் லூப்ரிகன்ட்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, அதை பேரல்களில் சேமித்து வைத்து பின்பு இவர்கள் வேறு சிலருக்கு இதை விற்பதாக கூறப்படுகிறது.</p>
<p>இந்த குடோனில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் வரை பேரல்களில் ஆயில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் கிடங்கில் திடீரென பற்றிய தீயில், அங்கு உள்ள எண்ணெய் பேரல்கள் வெடித்து சிதறின.</p>
<h2>தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் தீயணைப்பு வீரர்கள்</h2>
<p>தீப்பிழம்புகளாக பேரல்கள் வெடித்துச் சிதறுவதால், தீயணைப்பு வீரர்கள் அருகே சென்று தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ள பேரல்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறி, அந்தரத்தில் பறந்து வருகின்றன. சுமார் 60 அடி உயரத்திற்கு பேரல்கள் வானத்தை நோக்கி பறந்து தீப்பிடித்து கீழே விழுந்து சிதறுகின்றன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலை அருகே சென்று தீயை அணைக்க முற்படும்போது, பேரல்கள் வெடித்து சிதறுவதால், அங்கிருந்து பின்னால் விலகிச் சென்று பிறகு மீண்டும் திரும்பி வந்து ரசாயன நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால், அப்பகுதியல் பரபரப்பு நிலவி வருகிறது.</p>
<p><iframe title="CM Vijay Meeting | 15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>" src="https://www.youtube.com/embed/5F6V7RRPu60" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2>சீல் வைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நிறுவனம்</h2>
<p>இந்த நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு இருந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டதாகவும், இதன் சார்பாக வழக்கு ஒன்று நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அதில் விலக்கு அளிக்கப்பட்டு, இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கியதாகவும் கூறப்படுறது. இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, கடுமையான புகை மூட்டத்துடன் இந்த எண்ணெய் நிறுவனம் எரியத் தொடங்கியது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/jamun-is-a-boon-in-summer-this-super-fruit-s-health-benefits-diabetes-261340" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p>தகவல் அறிந்து, தீயணைப்புத் துறை சார்பாக மணலி புதுநகர் மணலி மற்றும் மாதவரம் எண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அனைப்பதற்காக வந்தன. தற்போது இந்த தீ அருகில் உள்ள நிறுவனங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஆனால், அந்நிறுவனங்களில் எந்தவித தீயணைப்பு சாதனங்களும் இல்லை என கூறப்படுகிறது. இப்படி, பாதுகாப்பு இல்லாமல் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுவது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. சாலை வசதி இல்லாமல் உள் பகுதிகளில் இந்த நிறுவனங்கள் செயல்படுவதால் இதைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என தெரியவருகிறது.</p>