<p>மத்திய அரசின் தரவுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் புகார்களை விரைவாக பெற்று, தொலைந்த செல்போன்களை மீட்டு தருவதில் மதுரை மாவட்ட காவல்துறை முதலிடம்.</p>
<div dir="auto"><strong>தொலைந்து போன செல்போன்கள் அடையாளம் காணவும்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மாவட்ட காவல்துறையின் கீழுள்ள காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொலைத்த செல்போன்கள் மற்றும் திருடுபோன செல்போன்கனை சைபர் கிரைம் காவல்துறையினர் மூலமாக மீட்கப்படுகிறது. செல்போன்கள் கண்டுபிடிப்பதில் மத்திய சாதன அடையாளப் பதிவேடு( சி.இ.ஐ.ஆர்.) முக்கிய பங்காற்றி வருகிறது. இது மத்திய அரசின் தொலைதொடர்பு துறையின் கீழ் உள்ள ஒரு தரவுதள அமைப்பாகும். இதன் மூலம் தொலைந்து போன செல்போன்கள் அடையாளம் காணவும், அவற்றின் சேவைகளை முடக்கவும் முடியும்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>டி.ஜி.பி. சந்தீப் மித்தல் வழங்கி பாராட்டினார்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இந்தநிலையில், தமிழகத்தில் இந்த CEIR தரவு தளத்தின் மூலம், பொது மக்களின் புகார்களை பதிவு செய்து, தொலைந்த செல்போன்களை மீட்டுத்தருவதில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுபோல், மாநிலத்தில் காவல் நிலையங்கள் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் உசிலம்பட்டி காவல் நிலையம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதற்காக மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை சார்பில் வழங்கப்படும், சிறந்த செயல்பாட்டுக்கான விருதை சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மித்தல் வழங்கி பாராட்டினார். இதற்கான பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் அதிகாரிகள் மற்றும் உசிலம்பட்டி காவல்துறையினர் கலந்துகொண்டு விருதினை பெற்றனர்.</div>