<div>திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.</div>
<div> </div>
<div><strong>வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா</strong></div>
<div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 91வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து கொட்டும் பனியில் விடிய, விடிய வரிசையில் காத்திருந்து பிரியாணி பிரசாதம் வாங்கிச் சென்றனர். திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை (நாயுடு) சேர்ந்தவர்களும் மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை (ரெட்டியார்) சேர்ந்தவர்களும் நடத்தி வரும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>பிரியாணியை அண்டா, அண்டாவாக தயார்செய்தனர். </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இந்த நிலையில் நாயுடு சமுதாயத்தினரால் நடத்தப்படும் பிரியாணி திருவிழா 91வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள், இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் வந்தனர். பெண்பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோயிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமிதரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா, அண்டாவாக தயார்செய்தனர். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை தயாராக வைக்கப்பட்ட அசைவ பிரியாணி காவல் தெய்வமான கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்<wbr />டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இவ்விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூறுகையில் முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி எனவும். இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்”. எனவும் தெரிவித்தனர்.</div>
</div>