<h2 style="text-align: justify;"><strong>தனியார் கண் மருத்துவமனை மருத்துவர் திரிவேணி ABP Nadu - விற்கு அளித்த பேட்டியில் ; </strong></h2>
<p style="text-align: justify;">பரவ நிலை மாற்றத்தால் வெகு விரைவாக நோய்கள் பரவக் கூடும். அதில் ஒன்றான மெட்ராஸ் ஐ - யானது தற்போது பரவ தொடங்கி உள்ளது. இது பெரும்பாலும் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்ணில் இருந்து வெளி வரும் நீர் மூலமாகவே இது பரவுகிறது. அதாவது மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது கண்ணைத் தொட்டு விட்டு, வேறு எதையாவது தொடும் போது இந்த மெட்ராஸ் ஐ பரவுகிறது.</p>
<h2 style="text-align: justify;"><strong>மெட்ராஸ் - ஐ அறிகுறிகள் என்னென்ன ? | Madras Eye Infection Symptoms</strong></h2>
<p style="text-align: justify;">கண்ணில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், கண்ணில் இருந்து மெழுகு போன்ற ஒன்று வெளியேறுவது, சூரிய ஒளியைப் பார்த்தாலே கண் கூசுவது ஆகியவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.</p>
<h2 style="text-align: justify;"><strong>என்னென்ன செய்ய வேண்டும்</strong> </h2>
<p style="text-align: justify;">கார்னியா பாதிக்கப்பட்டால் , மங்கலான பார்வையை ஏற்படுத்தும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை செய்த பின்பு மருத்துவர்கள் கூறும் மருந்துகளை மட்டுமே கடைகளுக்கு சென்று வாங்க வேண்டும். தாங்களாகவே மருந்துகளை வாங்க கூடாது.</p>
<h2 style="text-align: justify;"><strong>தனிமைப்படுத்த வேண்டும்</strong></h2>
<p style="text-align: justify;">பொதுவாக நாம் பயன்படுத்தும் துண்டுகள், தலையணை கவர்கள் மற்றும் மேக் - அப் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகள் மூலமாகவே இந்த மெட்ராஸ் ஐ பரவுகிறது. எனவே, மெட்ராஸ் ஐ வந்தால் முதலில் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்களில் இருந்து வெளியேறும் நீரைத் துடைக்க டிசு பேப்பரை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.</p>
<h2 style="text-align: justify;"><strong>பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்</strong></h2>
<p style="text-align: justify;">கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வந்தால் உடனே அதை நிறுத்துங்கள். மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு புதிய லென்ஸ்களை பயன்படுத்துங்கள். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் தான் இது வேகமாகப் பரவக்கூடும். எனவே, மெட்ராஸ் ஐ பாதிப்பு முழுமையாகச் சரியாகும் வரை , அதாவது கண் சிவத்தல் அல்லது நீர் வெளியேறுதல் முழுமையாக நிற்கும் வரை மக்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.</p>