<p>கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>கருமத்தம்பட்டி உட்கோட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்ட சூலூர் காவல் துறையினர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் கார்த்தி (35) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன் (31) ஆகியோரை கைது செய்தனர்.<br /><br /><strong>10 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம் - மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு:-</strong></p>
<p>இருவர்மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.</p>
<p>இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், இருவரையும் “பாலியல் குற்றவாளிகள்” என அறிவித்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.</p>
<p>இதையடுத்து, கார்த்தி மற்றும் மோகன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>