<p>கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் குடும்ப தகராறில் மகளை தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<h2><strong>மனைவியுடன் ஏற்பட்ட தகராறு</strong></h2>
<p>இந்த சம்பவம் அங்குள்ள மஞ்சேஷ்வர் பஞ்சாயத்துக்குட்பட்ட துமிநாட்டில் நடைபெற்றுள்ளது. அங்கு உமர் ஃபரூக் என்பவர் தனது மனைவி தஹிராவுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு மரியமத் ஜூமாயிலா என்ற மகள் உள்ளார். இதனிடையே வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த உமர் ஃபாரூக் கடந்த 3 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பினார். </p>
<p>அதேசமயம் மனைவி தஹிராவுடன் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்ததால் அவரை விவாகரத்து செய்யும் முடிவிலும் உமர் இருந்துள்ளார். இந்த நிலையில் உமர் ஃபாரூக்கை துமிநாட்டில் இருக்கும் தனது சகோதரி வீட்டுக்கு வருமாறு தஹிரா அழைத்துள்ளார். அங்கு குடும்ப பிரச்னை பற்றி பேசி தீர்வு காணலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து தனது சகோதரருடன் துமி நாட்டுக்கு உமர் சென்றார். அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் தஹிரா தன்னிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை உமர் ஃபாரூக்கிடம் கொடுத்து தன்னை விட்டு விலகும்படி தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>மகள் குத்திக்கொலை</strong></h2>
<p>அதற்கு மறுப்பேதும் பேசாமல் உமரும் அதனை பெற்றுக்கொண்டு சகோதரருடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதனிடையே சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த தனது மகள் மரியமத் ஜூமாயிலா கழுத்தில் அவர் கத்தியால் குத்தினார். இதனால் நிலைகுலைந்து போன அந்த சிறுமி இரத்த வெள்ளத்தில் விழுந்து மயங்கினார். இதனை தடுக்க வந்த தஹிராவின் சகோதரி கணவர் ஷேகுன்ஹிக்கும் கத்திக்குத்து விழுந்தது.</p>
<p>இதனையடுத்து ஜூமாயிலா மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மங்கள்பாடி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. <br /> <br />மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக உமர் ஃபாரூக்கை மஞ்சேஷ்வர் காவல்துறையினர் கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உமர் ஃபாரூக் பற்றி கருத்து தெரிவித்த காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஹர்ஷத் வோர்காடி, அவர் கஞ்சாவுக்கு அடிமையானவர் என்றும், வீட்டில் அடிக்கடி பிரச்னைகளை உருவாக்கி மனைவியுடன் தகராறு செய்பவர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தந்தையால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஜுமெய்லா மஞ்சேஷ்வரில் உள்ள சிராஜுல் ஹுதா ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/did-you-know-that-cauliflower-is-poisonous-to-these-5-people-248769" width="631" height="381" scrolling="no"></iframe></p>