<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யபட்டு வருகிறது. தகனம் செய்யும்போது திடீரென்று மழை வந்ததால் நெருப்பு எரியாமல் உள்ளது. இதனால் கருணாபுரம் மக்கள் வேதனையில் தவித்து வருகின்றனர்.</strong></span></p>
<h2 style="text-align: justify;">கள்ளக்குறிச்சியில் தொடரும் விஷச்சாராயம் உயிரிழப்பு</h2>
<p style="text-align: justify;">கள்ளக்குறிச்சி பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 132 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். தற்பொழுது 93 நபர்கள் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை விஷச்சாராயம் குடித்து 39 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவர் என 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p>
<p style="text-align: justify;">இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 08 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேரும் மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. </p>
<h2 style="text-align: justify;">சிக்கல்</h2>
<p style="text-align: justify;">ஒரே நேரத்தில் நிறைய பேர் உயிரிழந்திருப்பதால் உடற்கூறாய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்த பாதிப்படைந்த நபர்களுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி வரை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<h2 style="text-align: justify;">ஒரு நபர் விசாரணை ஆணையம்</h2>
<p style="text-align: justify;"><br />தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணையும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதுபோக இது தொடர்பாக மூன்று நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றமும், காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக கடமையை செய்ய தவறியதாக ஒன்பது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<h2 style="text-align: justify;">நல்லடக்கம்</h2>
<p style="text-align: justify;">ஒரே நேரத்தில் ஒரே பகுதியை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்ய நகராட்சி ஊழியர்கள் பணியமத்தப்பட்டனர். ஒரே நேரத்தில் 21 பேர் எரிக்கவும் மேலும் 4 பேர் புதைத்தும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
<h2 style="text-align: justify;">இறுதி ஊர்வலத்தில் மழை</h2>
<p style="text-align: justify;">இதற்கான கோமுகி நதிக்கரையில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட உடல்கள், வழி எங்கும் மலர்கள் தூவப்பட்டு இறுதி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, திடீரென மழை பெய்தததால் கிராம மக்களே அதிர்ச்சி அடைந்தனர். ஒருபுறத்தில் வானமே அழுகிறது, என கிராம மக்கள் சேர்ந்து அழத் துவங்கினர். இந்தநிலையில் எரியூட்டப்பட்ட உடல் மீது தொடர்ந்து மழைத்துளி பெய்து வருவதால், உடல் எறியாமல் போகி விடுமோ என்ற அச்சமும் உறவினர்களிடையே எழுந்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் மழை பெய்திருப்பது, பொதுமக்களே அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.</p>