<p style="text-align: left;">மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும், ஒற்றை அடுக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: left;"><strong>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</strong></p>
<p style="text-align: left;">ஜி.எஸ்.டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. அடித்தட்டு மக்கள் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினருக்கும் இந்த சீர்திருத்தங்கள் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.</p>
<p style="text-align: left;">இது வரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்னணு பொருள்கள், செல்பேசிகள், வாகனங்கள், காப்பீடுகள் ஆகியவற்றின் வரி குறைக்கப்படவுள்ளன. இதனால், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதைப் போல தோன்றினாலும், வணிகம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பொருளும் விற்பனை செய்யப்படும் போது மிகக் குறுகிய காலத்தில் அந்த வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.</p>
<p style="text-align: left;">உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீதான வரி 40% அதிகரிக்கப்பட்டிருப்பது மிகவும் சரியானது. அதேநேரத்தில் பீடியின் மீதான வரி 28 விழுக்காட்டில் இருந்து 40% ஆக அதிகரிக்கப்படுவதற்கு பதிலாக 18% ஆக குறைக்கப்பட்டிருப்பது, பரோட்டா போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.</p>
<h2 style="text-align: left;">ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:</h2>
<p style="text-align: left;">மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில், தற்போதுள்ள நான்கு விகித முறையை மாற்றி, 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை வரி அமைப்பை அங்கீகரித்துள்ளது. 12 சதவீதம் மற்றும் 18 சதவீத அடுக்குகளை நீக்கும் புதிய வரிவிதிப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: left;">இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களுக்கு முழு வருகையை முன்னிலைப்படுத்தி, "சிறிய" கவலைகள் இருந்தபோதிலும் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். "ஜிஎஸ்டியில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்,"</p>
<p style="text-align: left;">"இந்த சீர்திருத்தங்கள் சாமானிய மக்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாமானிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான ஒவ்வொரு வரியும் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விகிதங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன... உழைப்பு மிகுந்த தொழில்களுக்கு நல்ல ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை பயனடையும். பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்," என்று அவர் கூறினார்.</p>