<p style="text-align: left;">சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பாலசுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.</p>
<p style="text-align: left;">இதுகுறித்து தகவல் அறிந்த, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம், வடிவேலின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வடிவேலின் இறப்புக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்த போது, வாழப்பாடியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில், வடிவேல் விவசாய பணிக்காக தனது நிலத்தை அடமானம் வைத்து, ரூ.5 லட்சம் கடனை கடந்த 2021 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். அதற்கு மாதம்தோறும் ரூ.12,300 வீதம் தவணை கட்டி வந்துள்ளார். கடனில் 18 தவணைகள் மீதம் உள்ள நிலையில், இந்த மாத தவணை செலுத்துவதற்கு 20 நாட்கள் தாமதமாகியுள்ளது. இதனால், அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த 2 ஊழியர்கள், நேற்று முன்தினம் வடிவேல் வீட்டிற்கு பணத்தை கேட்டு, தரக்குறைவாக பேசி தகராறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த வடிவேல், விஷத்தை குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.</p>
<p style="text-align: left;">இதையடுத்து வடிவேலின் மனைவி வள்ளியம்மை மற்றும் குடும்பத்தினர், வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தார். பின்னர், வடிவேலின் உடலை கைப்பற்றி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். நேற்று மாலை வடிவேலின் உடலை, பிரேத பரிசோதனை செய்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடன் தவணை கட்ட காலதாமதமானதால், வடிவேலை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p style="text-align: left;"><strong>மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.</strong></p>
<p style="text-align: left;"><strong>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,</strong></p>
<p style="text-align: left;"><strong>எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,</strong></p>
<p style="text-align: left;"><strong>சென்னை - 600 028.</strong></p>
<p style="text-align: left;"><strong>தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)</strong></p>