<p style="text-align: justify;">புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறி ரூ.9.14 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது, இதுகுறித்து சைபர்கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<h2 style="text-align: justify;">பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறி ரூ.9.14 லட்சம் மோசடி</h2>
<p style="text-align: justify;">புதுச்சேரி சூரியகாந்தி நகரை சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் நட்பாக பேசி வந்துள்ளார். அந்த நபர் பெண்ணிற்கு, கூரியர் மூலம் பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மற்றொரு மர்ம நபர், சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி, உங்களுடைய பெயருக்கு பரிசு பொருள் ஒன்று வந்துள்ளதாகவும், அதனை டெலிவரி செய்வதற்கு செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார். இதை நம்பிய அப்பெண் ரூ.9 லட்சத்து 14 ஆயிரத்து அனுப்பி ஏமாந்தார். இதனை அறிந்த அந்த பெண் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதேபோல், கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் 20 ஆயிரம், சாரத்தை சேர்ந்த ஆண் நபர் 2 ஆயிரத்து 500, சுத்துக்கேணியை சேர்ந்த நபர் 7 ஆயிரத்து 200, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரத்து 300, வில்லியனுாரை சேர்ந்த நபர் 21 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 75 ஆயிரம், ஒயிட் டவுனை சேர்ந்த நபர் 10 ஆயிரம், வினோபா நகரை சேர்ந்த நபர் 20 ஆயிரத்து 300 என 9 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.</p>
<h2 style="text-align: justify;">விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்</h2>
<p style="text-align: justify;">இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.</p>
<p style="text-align: justify;">அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.</p>
<h2 style="text-align: justify;">சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க</h2>
<p style="text-align: justify;">மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;"> </p>