<h3><strong>ஆக்கிரமிப்பு என்றால் என்ன ?</strong></h3>
<p>பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது ஆவணங்கள் தொடர்பான ஆய்வு மட்டும் போதாது. அந்த சொத்து ஏதாவது ஒரு வகையில் ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ளதா என்பதை கவனமாக விசாரித்து அறிய வேண்டும்.</p>
<p>அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலத்தை வளைத்து பயன்படுத்தினால் மட்டும் தான் ஆக்கிரமிப்பு என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் எது ஆக்கிரமிப்பு என்பது தொடர்பான அடிப்படை விஷயங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியம்.</p>
<h3><strong>வணிக நோக்கத்தில் விற்பது சட்ட விரோதம்</strong></h3>
<p>அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான இடத்தை அவர்களின் அனுமதி இன்றி யார் பயன்படுத்தினாலும் அது ஆக்கிரமிப்பு என்ற வரையறையின் கீழ் தான் வரும். இது போன்று ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதே அடிப்படையில் குற்றம் என்று தான் பார்க்கப்படுகிறது.</p>
<p>அப்படி இருக்கையில் ஆக்கிரமித்து பயன்படுத்தி வரும் இடத்தை வணிக நோக்கத்தில் அடுத்தவருக்கு விற்பது, உண்மையில் சட்டத்துக்கு புறம்பான செயலாக தான் பார்க்கப்படுகிறது. இதில் தனி நபரிடம் உள்ள சொத்தை வாங்கும் போது அதில் எப்படி ஆக்கிரமிப்பு பிரச்சனை வரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<h3><strong>பட்டாவில் சரியாக உள்ளதா ?</strong></h3>
<p>பொதுவாக ஒரு நபர் பெயரில் உள்ள சொத்தை வாங்கும் போது அதற்கான பத்திரத்தில் உள்ள விபரங்கள் சரியா என்பதை 30 ஆண்டுகளுக்கான பதிவு விபரங்கள் வாயிலாக சரி பார்க்கலாம். அதே விபரங்கள் பட்டாவிலும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பட்டா மற்றும் பத்திரத்தில் தனி நபர் பெயரில் முழுதும் முறையாக இருக்கும் சொத்தை மட்டுமே வாங்க வேண்டும்.</p>
<p>இத்துடன் சர்வேயர் வாயிலாக அளக்கும் போதும் அதே பரப்பளவு விபரங்கள் ஆவணங்களுடன் ஒத்து போக வேண்டும். இதில் அந்த நிலம் அமைந்துள்ள பகுதி இதற்கு முன் என்னவாக இருந்தது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டுக்கான பாதை, கால்வாய், ஓடை, நீர்நிலையாக இருந்திருந்தால், அதை வாங்குவது குற்றச் செயலுக்கு இணையானதாகும்.</p>
<h3><strong>ஆக்கிரமிப்பு இல்லை - உறுதி செய்ய வேண்டும்</strong></h3>
<p>சில சமயங்களில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வரும் நபர், அதை விற்பதற்கு முயற்சிப்பார். இவ்வாறு தங்கள் நிலத்துடன் சேர்த்து அடுத்தவர் நிலத்தின் ஒரு பகுதியையும் இணைத்து விற்பதிலும் ஆக்கிரமிப்பு பிரச்னை வரக் கூடும்.</p>
<p>எனவே வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர் அது எந்த விதத்திலும் அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.</p>