<p style="text-align: justify;">டெல்லியில் மனிதர்கள் பலர் திடீரென காணமல் போய்வருவதாகவும், பலர் எங்கே சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லையென்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. பல குடும்பத்தினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் தொலைந்துப்போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் திணறிவருவதாகவும் கூறப்படுகிறது. கொத்து, கொத்தான மனிதர்கள் எப்படி தொலைந்துப்போவார்கள் ? இது மாயாஜாலாமா? அல்லது யாரேனும் அவர்களை கடத்தியிருக்கிறார்களா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தலைநகர் டெல்லியில் எழுந்து வருகிறது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். </p>
<figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/05/5a67166e15ad0237b57c50c0d43acd841770291424612108_original.jpg" alt="வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி" />
<figcaption>வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி</figcaption>
</figure>
<p style="text-align: justify;"><br /><em><strong>TVK வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு அறிக்கை</strong></em></p>
<p style="text-align: justify;">அதில். “இந்தியாவின் இதயப் பகுதியான தில்லி மாநகரில், 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குறிப்பாக, காணாமல் போனவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் சிறுமிகளும் பெண்களும் என்பது நெஞ்சைப் பதற வைப்பதோடு, இந்திய பெருநிலத்தின் பாதுகாப்புத் தன்மையையே கேலிக்குள்ளாக்கி உள்ளது.</p>
<p style="text-align: justify;"><em><strong>சாமானிய பெண்களுக்கு டெல்லியில் பாதுகாப்பு இல்லையா?</strong></em></p>
<p style="text-align: justify;">நாட்டின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அன்றாடம் நடமாடும் தலைநகரில், சாமானியப் பெண்களுக்கு இந்த கதி ஏற்படுவது தேசத்திற்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகும். நாட்டின் உளவுத்துறையும், காவல்துறையும், உள்துறை அமைச்சகமும் எதற்காக இயங்குகின்றன என்கிற கேள்வி, இன்று ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கனன்று கொண்டிருக்கிறது.<br /><br />கடந்த 10 ஆண்டுகளில் 52,000-க்கும் மேற்பட்டோர் தில்லியில் காணாமல் போய், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது என்பது பாதுகாப்பு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வியையே பறைசாற்றுகிறது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.<br /><br />பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வெற்று முழக்கங்களை மட்டுமே முன்வைக்கும் ஒன்றிய அரசின் கண்காணிப்புகள் நிறைந்த தில்லியில், இந்த மனிதக் கடத்தல்களையும் குற்றங்களையும் தடுக்கத் தவறியது ஏன்? ஒன்றிய அரசும், தில்லி அரசும் ஒருங்கிணைந்து, உடனடியாக பலமான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, காணாமல் போனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><em><strong>முக்கிய பிரச்னையை கண்டுகொள்ளுமா மத்திய மாநில அரசுகள்</strong></em></p>
<p style="text-align: justify;">மனிதர்கள் காணாமல்போய் வரும் தகவல் டெல்லியில் அடுத்த அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, பெண்களும் சிறுமிகளும் காணாமல் போவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டு செய்திருக்கிறது. உடனடியாக இந்த விவகாரத்தில் மாநில, மத்திய அரசுகள் தலையிட்டு, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, காணாமல் போனவர்கள் எங்கே சென்றார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.</p>