<p>சென்னையில் இலவச வைஃபை, இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் , சிசிடிவி கேமராக்கள் மற்றும் குறைந்த சத்தம் போன்ற அம்சங்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசான தனியார் பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<h2><strong>அரசு - தனியார் இணைந்து சேவை :</strong></h2>
<p>இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மாநிலப் போக்குவரத்துத் துறையிடம் இருந்து, அதிக தேவை உள்ள வழித்தடங்களில் பிரீமியம் பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.</p>
<p>வருவாய் பகிர்வு மாதிரியின் கீழ் ( Revenue Share Model ), அரசுடன் தனியார் இணைந்து இயக்கக்கூடிய இந்த பிரீமியம் பேருந்துகள் MTCயின் டிப்போக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை கட்டணத்துடன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.</p>
<p>மேலும் , இந்த தனியார் பேருந்துகள் MTC லோகோவையும் , தனியார் பேருந்துவின் லோகோவையும் கொண்டிருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.</p>
<p>தற்போது, 629 வழித்தடங்களில் 3,200 பேருந்துகளை MTC இயக்குகிறது. இதில், தோராயமாக தினசரி 32 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. </p>
<h2><strong>இறுதி கட்டம்:</strong></h2>
<p>இந்த பிரீமியம் பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தடங்கள் மற்றும் கட்டணம், எம்டிசியின் குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் கட்டணத்தை விட அதிகமாக இருக்குமா என்பது குறித்தான தகவல் கிடைக்கவில்லை.</p>
<p>இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இப்போது இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.</p>
<p>கடந்த ஜூன் 2024 இல் மாநில சட்டமன்றத்தில், மாநிலப் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொதுப் போக்குவரத்திற்கான ஆதரவை அதிகரிப்பதற்கும் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் உயர்தர வசதிகளுடன் கூடிய பிரீமியம் பேருந்து சேவைகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-encourage-your-children-study-book-214240" width="631" height="381" scrolling="no"></iframe></p>