<p><strong>Bike Challans:</strong> போக்குவரத்து விதிகளை மீறியதாக விதிக்கப்பட்ட 41 அபராதங்களுக்கான, 90 நாட்கள் அவகாசத்தையும் கடந்ததால் போலீசார் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p>
<h2><strong>41 சலான்கள்.. ரூ.5 லட்சம் அபராதம்</strong></h2>
<p>குருகிராம் அருகே போக்குவரத்து விதிகளை மீறியதாக இருசக்கர வாகனத்திற்கு விதிக்கப்பட்ட 41 அபராதங்களை, குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்ததான் காரணமாக போலீசார் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மொத்த அபராதத் தொகை ரூ.5 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு சலானுக்கான அபராதத் தொகையை செலுத்தவும் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, ஒன்றிற்கான தொகையையும் செலுத்தாததால் துண்டஹரே எல்லைப்பகுதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரியான மாநில பதிவெண்னான HR13J6809 என்ற எண் பலகையை கொண்டிருந்த வாகனம் சந்தீப் என்பவரது பெயரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், ஜிந்த் பகுதியை சேர்ந்த சுமித் என்பவர் ஓட்டி வரும்போது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/which-part-of-the-body-never-gets-tired-details-in-pics-249301" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>விதிமீறல்கள் என்ன?</strong></h2>
<p>வாகனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள விதிமீறல்களில் லைசென்ஸ் இன்றி வாகனத்தை ஓட்டியது, தகுதியான இன்சூரன்ஸ் சான்றுகள் இல்லாதது, மிகவும் பாதுகாப்பான பதிவு எண் பலகை இல்லாதது மற்றும் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகியவை முதன்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் விதிக்கப்பட்ட 41 சலான்களுக்கான கால அவகாசமும் முடிந்த பிறகும் பணம் செலுத்தப்படாததால், மோட்டார் வாகன சட்டம் 167(8) பிரிவின்படி குறிப்பிட்ட மோட்டாட்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>
<h2><strong>வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை</strong></h2>
<p>போக்குவரத்து துணை ஆணையர் ராஜேஷ் மொஹம் தலைமையில் இந்த வாகன பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மண்டல அதிகாரி ஏ.எஸ்.ஐ. அசோக் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாகனம் சிக்கியுள்ளது. தொடர்ந்து, சோதனையின் போது தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள அபராதங்களின் விவரங்கள் குறித்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதிகப்படியான அபராதங்கள் நிலுவையில் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர். நாடு முழுவதும் சாலை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே, நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை தவிர்ப்பது நல்லது. </p>
<h2><strong>ஆன்லைனிலேயே போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது எப்படி?</strong></h2>
<ul>
<li>eChallan Parivahan இணையதள முகவரியை அணுகவும்</li>
<li> உங்கள் வாகன எண், சலான் எண் அல்லது ஓட்டுநர் உரிமம் (DL) எண்ணை உள்ளீடு செய்யுங்கள்</li>
<li> கேப்ட்சா குறியீட்டை நிரப்பி 'விவரங்களைப் பெறு' என்பதைக் கிளிக் செய்யவும்</li>
<li>நிலுவையில் உள்ள சலான்கள், குற்ற விவரங்கள், புகைப்பட ஆதாரங்கள் மற்றும் அபராதத் தொகை விவரங்களை திரையில் காணலாம்</li>
<li>'இப்போது பணம் செலுத்து' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை (UPI, கார்டு, நெட் பேங்கிங்) தேர்ந்தெடுத்து, பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்</li>
<li>எதிர்கால பயன்பாட்டிற்காக கட்டண ரசீதைச் சேமிக்கவும் அல்லது ப்ரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்</li>
</ul>
<h2><strong>கட்டணம் செலுத்துவதற்கான மாற்று முறைகள்:</strong></h2>
<ul>
<li>தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை அணுகலாம்</li>
<li>சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஆன்லைனில் அபராதம் செலுத்த ஆன்லைன் நீதிமன்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம்</li>
<li>பரிவஹான் செயலியை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்துங்கள்</li>
</ul>