<p style="text-align: left;">சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார், கூலித் தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு விக்னேஷ், சதீஷ்குமார் என 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 28 ஆம் தேதி இரவு, வீட்டின் அருகேயுள்ள செப்டிக் டேங்கில் விஜய குமாரின் குழந்தைகள் இருவரும் விழுந்து விட்டதாக கூறி, இளவரசி அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு இருந்தவர்கள் விரைந்து சென்று, செப்டிக் டேங்கில் விழுந்து கிடந்த 2 குழந்தைகளை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.</p>
<p style="text-align: left;">இதுகுறித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இளவரசி தகாத உறவு விவகாரத்தில், தன்னுடைய 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்து விட்டதாக, விஜய குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, இளவரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.</p>
<p style="text-align: left;">இதுகுறித்து இளவரசி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியது, "எனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபரிடம் உறவு இருந்தது. இதையறிந்த எனது கணவர் விஜயகுமார், தகாத உறவை கைவிடும் படி கூறி என்னை கண்டித்தார். இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 28 ஆம் தேதி, இது தொடர்பாக மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, என்னை கொல்லாமல் விட மாட்டேன் என கூறி விட்டு, கணவர் வெளியே சென்று விட்டார்.</p>
<p style="text-align: left;">இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். பின்னர், வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில், 2 குழந்தைகளையும் வீசினேன். பின்னர், நானும் டேங்கின் உள்ளே குதித்தேன். அப்போது, திடீரென பயத்தில் அலறினேன். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து என்னையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால், அதற்குள் குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்" இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இளவரசியை கைது செய்த போலீசார், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>